இப்போது திரும்பி பார்க்கையில் பள்ளிப்பருவம் என்பது பெரும்பாலானோர்க்கு ஒரு வசந்த காலம்!
சிறு வயது நண்பர்கள், அவர்களுடன் விளையாடிய விளையாட்டுக்கள் , குறும்பு தனங்கள், யாரையும் புண்படுத்தாத சின்ன சின்ன தவறுகள், சிறு வயது அப்பா, அம்மா, பயமுறுத்தும் அதே நேரம் பாராட்டும் ஆசிரியர்கள், பள்ளியின் பக்கத்தில் மாங்காய், புளிப்பு மிட்டாய், இலந்தை பழம் இத்யாதிகளை விற்கும் பாட்டி, முதல் சைக்கிள், ரேங்க் கார்ட், பேச்சு, ஓவியம் , கட்டுரை போட்டிகள், யூனிபார்ம், ஸ்கூல் பிரேயர்........ இவற்றோடு சில மனிதர்களும்...
அப்படி என் வாழ்வில் ஒரு மனிதர் தான் மும்தாஜ் பாய். அவர் இயற்பெயர் என்ன என்று இதுவரை எனக்கு தெரியாது. ஆனாலும் அவருக்காக இதை எழுதவேண்டும் என்று தோன்றுகிறது.
மும்தாஜ் பாய் எனக்கு அறிமுகம் ஆனது 1994 இல். என் அத்தை எங்கள் ஊரில் உள்ள அரசு பள்ளியில் தமிழாசிரியர். அவரால் நடந்து பள்ளிக்கு செல்ல முடியாமல் விட்ட ஒரு காலத்தில், எங்களுக்கு அறிமுகம் ஆன ஆட்டோ ஓட்டுனர் மும்தாஜ் பாய். அவர் ஒரு முஸ்லிம் என்ற காரணத்தாலும், அவரது பெண் என் அத்தையின் மாணவி என்பதாலும் அவளது பெயரே, அவள் தந்தையின் பெயராய் போனது. மும்தாஜ் பாய்!
பார்பதற்க்கு சிறிது குள்ளமாய், உருண்டையாய் கிட்டத்தட்ட நடிகர் ஹனீபா வை நினைவு படுத்தும் உருவம். உற்சாகமான மனிதர். தினமும் காலை 8:30 மணிக்கு - "டீச்சர்!!" என்னும் அவர் குரலும், "வந்துட்டேன் பாய்" என்கிற என் அத்தை குரலும் இன்னும் எனக்கு மறக்க வில்லை. எங்கள் வீட்டுக்கு உள்ளே வந்து எல்லாரிடமும் நன்றாய் பேசும் பழக்கம் அவருக்கு. நான் "சுஜேந்தர்" (சுரேந்தர் என்ற பெயரில் 'ரே' வராது), என் தம்பி பாபு, என் அப்பா சார், என் அம்மா சிஸ்டர், அத்தை டீச்சர் - இப்படிதான் எல்லாரையும் அழைப்பார்.
அப்போது ப்ரண்ட் (Front) என்ஜின் ஆட்டோ வைத்திருந்தார். டிரைவர் சீட்டுக்கு அடியில் எஞ்சின் இருக்கும்.
1998 இல் நான் எழாவது படிக்கும் போது - எனக்கு இடது கையில் ஒரு எலும்பு முறிவு ஏற்பட்டது. அது வரை நடந்து பள்ளிக்கு சென்று கொண்டிருந்த நான், ஆட்டோவில் செல்ல ஆரம்பித்தேன். இணைப்பாக என் தம்பியும். எங்கள் குடியிருப்பில் உள்ள ஆட்டோ டிரைவர்களில் பொறுப்பாய் இருப்பவர் மும்தாஜ் பாய் என்பதால் அவரை அழைத்து பேசப்பட்டது.
"வேகமா போகாத பாய், பசங்கள பாத்து கொண்டு போய் விடு" - என்னும் அப்பாவின் குரலுக்கு, "ஆ ங் , நான் பாத்துக்கறேன் சார்" என்று சொல்லி எங்களை பார்த்து சிரித்தபடி , ஆட்டோவை ஸ்டார்ட் செய்வார். எனக்கு கை அதிரக்கூடாது என்பதற்காக அவ்வளவு பொறுமையாய் ஓட்டுவார். கிட்டதட்ட அந்த ஒன்றரை வருட பழக்கத்தில், தெருவில் ஒரு ஆட்டோ சத்தம் கேட்டாலே, மும்தாஜ் பாயின் ஆட்டோவை கண்டுகொள்ளும் திறன் எங்களுக்கு வந்து விட்டிருந்தது.
நான் சைக்கிள் பழகியது எட்டாம் வகுப்பு படிக்கும் போதுதான். "பையன் கீழே விழுந்துடுவான்" என்று சொல்லியே அது வரை எனக்கு சைக்கிள் சொல்லிதரபடவில்லை. எனக்கு சைக்கிள் பழக்கியது மும்தாஜ் பாய். அவர் பிடித்து கொள்ள, நான் ஓட்டி பழகினேன். பிறகு அவரை சைக்கிள் கேரியரில் வைத்து கொண்டு, எங்கள் வீட்டுக்கு பின்னால் உள்ள சிறு தொழில் பூங்காவில் ரவுண்டு அடித்திருக்கிறேன்.
ஒரு நாள், எனக்கு மூட் சரி இல்லாத போது அவர் ஏதோ சொல்லபோய் நான் ஏதோ புரிந்து கொண்டு, "இனிமே பாய் ஆட்டோல நா போ மாட்டேன்" என்று அம்மாவிடம் சொல்லி விட்டேன். என்னை விட 40 வயது பெரியவராய் இருந்தாலும், என்னிடம் கெஞ்சி கொண்டிருந்தார். "நான் அப்டி எல்லாம் சொல்லல சிஸ்டர்.. சின்ன பையன் ஏதோ கோவப்பட்டான், விடுங்க நான் பேசறேன்" - அவர் கண்ணில் முதன் முதலில் கண்ணீர் பார்த்த நாள்.
நாங்கள் முதலில் சைக்கிள் வாங்கியபோது, நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தோமோ அந்த அளவுக்கு வருத்தம் அடைந்தவர் அல்லது அடைந்தது போல் நடித்தவர் மும்தாஜ் பாய்."போடா டேய், மாசம் 400 ரூபா போச்சு டா, சைக்கிள் வாங்கிட்டீங்க, நீங்க வேலைக்கு வந்ததும் மாசம் 500 ரூபா எனக்கு தரனும்" - என்று உரிமையோடு கேட்பார். அவர் ஒரு அ.தி.மு.க காரர். அவர் காலை வாருவது என் அப்பாவின் பொழுது போக்கு.. "எப்படி சொல்றார் பார் " என்று என்னை பார்த்து கேட்பார். எங்கள் வீட்டுக்கு எப்போது வந்தாலும் - எங்கள் அப்பாவின் அறையில் உள்ள கண்ணாடியில் முகம் பார்த்து அங்கே இருக்கும் கோகுல் சாண்டல் பவுடரை போடும் வழக்கம் வைத்திருந்தார்.
அவருக்கு இங்கிலீஷ் பேசவேண்டும் என்று ஆசை, அவர் கற்று கொண்டவை இரண்டு, "ப்ளடி பூல்" , "வாட் நான் சென்ஸ் யு ஆர் டாக்கிங்".. அவர் இது ரெண்டும் உபயோகித்தால் உற்சாகமாய் இருக்கிறார் என்று அர்த்தம். பிறகு ஒரு நாள் என் அப்பா, "இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமாய்யா?" என்று கேட்டு சொன்னபோது - எனக்கு தெரியல சார் என்று வருத்தப்பட்டார்.
நான் பள்ளி முடித்து கல்லூரி சென்ற போது, அவர் ஆட்டோ ஓட்டுவதை குறைத்து விட்டிருந்தார். நான் எப்போது விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தாலும், என் சட்டை பைக்குள் கை விட்டு, காசு குட்றா என்பார்.. "இவன் வேஸ்ட் சார், உங்கள மாதிரி, காசே தரதில்ல, நமக்கு பாபு தான் ரைட்" - என்று என் தம்பியிடம் செல்வார். வேலைக்கு வந்தவுடன் அவருக்கு ஏதாவது தர வேண்டும் என்று நினைத்து கொள்வேன்.
என் சித்தப்பா இறந்த போது கூட இருந்து எல்லாவற்றையும் பார்த்தது மும்தாஜ் பாய். நான் சித்தப்பா முகத்தை பார்க்க முடியவில்லை, தஞ்சாவூரில் இருந்து வருவதற்குள் எடுத்து விட்டிருந்தார்கள். அப்பாவுக்கு தெரியாமல், மாலை 6:30 மணிக்கு மயானத்திற்கு அழைத்து சென்றவர் பாய். - நல்ல உடம்பு டா, முழுசா எரிஞ்சு போச்சு என்றார். அவை எல்லாம் இன்று கண் முன்னே வந்து செல்கின்றது.
எனக்கு வேலை கிடைத்த தகவலை அவருக்கு சொன்னவுடன், எந்த ஊர் டா, என்ன சம்பளம், மாசம் எனக்கு மாமூல் தரணும், மறந்துடாத என்று சிரித்து கொண்டே சொன்னார். நான் வேலையில் சேர்ந்த போது, அவர் ஆட்டோ ஓட்டுவதை முழுவதுமாய் நிறுத்தியிருந்தார். அவரை வீட்டுப்பக்கம் பார்க்க முடியவில்லை, ஒரு நாள் அவரது வீட்டுக்கு சென்று பார்த்து விட்டு ஒரு செட் டிரஸ் எடுத்து தரவேண்டும் என்று நினைத்து கொண்டே இருந்தேன்.
போக முடியவில்லை என்பது பொய். சோம்பேறித்தனம் என்பதே உண்மை. நாளை போகலாம், நாளை மறுநாள், அடுத்த வாரம் என்று மூன்று வருடங்கள் கடந்து விட்டன.
போன வாரம் ஒரு நாள் காலை அப்பா என்னை மொபைலில் அழைத்து - "மும்தாஜ் பாய் போயாச்சு" என்ற போது என்னால் நம்ப முடியவில்லை. ஏனெனில், அதற்கு முந்தைய நாள் தான் பாயை போய் பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். சாவுக்கும் நான் போகவில்லை.ஒரு குற்ற உணர்ச்சி என்னை குத்தி கொண்டே இருக்கிறது. ஒருவர் இருக்கிற போது அவர் அருகாமை பெரிதாய் தெரிவதில்லை என்று பொட்டில் அறைந்தார் போல் சொல்லி போயிருக்கிறார் பாய்.
அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்!
இனிமேல் நான் செய்ய விரும்புவது ஒன்றே! - ஒருவரை சந்திக்க வேண்டும் அல்லது அன்பு செலுத்த வேண்டும் என்று நினைத்து விட்டால் அதனை உடனே செய்ய வேண்டும். காலமும், உயிரும் அன்புக்காக காத்திருப்பதில்லை.
We must give importance to time when it comes to love..
என்றும் அன்புடன்,
சுரேந்திரா

