Showing posts with label சிந்தனை துளிகள். Show all posts
Showing posts with label சிந்தனை துளிகள். Show all posts

Thursday, May 14, 2009

கல்வி கண் போன்றது!

நேற்று +2 தேர்வு முடிவுகள் வெளியாகின. வழக்கம் போல், எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும் , நாமக்கல் மாணவன் முதலிடம், சென்னை மாணவி இரண்டாமிடம் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள். வழக்கம் போல், கேமராவை காட்டி, பள்ளி டீச்சர்களும், பெற்றோர்களும் அந்த பிள்ளைகளுக்கு இனிப்பு ஊட்டுதலும், "நான் இந்த மார்க் வாங்க எங்க அப்பா, அம்மாவும், ஸ்கூல் டீச்சர்ஸ் தான் காரணம்" என்ற சம்பிரதாய டயலாக்குகளும் அரங்கேறிகொண்டிருந்தன. வழக்கம் போல், மாணவர்கள் தேர்வு முடிவு போர்டினை பார்க்கும் க்ளிப்பிங் இடம் பெற்றிருந்தது. வழக்கம் போல், பள்ளி முதல்வர்கள் இதற்கு முன்னர் அந்த மாணவனை பார்த்தே இல்லாவிட்டாலும் , "திரு. ........., படிப்பில் எப்போதுமே சிறந்து விளங்குவார். மிகவும் ஒழுக்கமான மாணவன், ஆசிரியர் சொல்லிக்கொடுத்ததை நன்றாக கவனித்து படிக்க கூடியவர் " , என்று தான் பள்ளிக்கு ஒரு விளம்பரம் ஏற்படுத்திகொடுத்த அந்த மாணவர்களை பாராட்டிக்கொண்டிருந்தர்கள். வழக்கம் போல், "நான் மெடிசின் படிக்கணும் , இன்ஜினியரிங் படிக்கணும், : என்று அந்த மாணவ கண்மணிகள் பேட்டி கொடுத்தன. வழக்கம் போல், "அவனுக்கு எப்பவுமே படிக்கிறதுனா ரொம்ப பிடிக்கும்" , என்று பெற்றோர் , தன் பிள்ளை பெருமை பேசிகொண்டிருந்தனர்.

என்ன தான், இவர்கள் முதல் மதிப்பெண் எடுத்தாலும், இவர்களில் எத்தனை பேர் ஒரு மிகச்சிறந்த பொறியாளனாகவோ, மருத்துவராகவோ வருகிறார்கள்? எனக்கு தெரியவில்லை!

மேலும், ஒரு அரசு பள்ளி மாணவனோ, ஒரு "இரண்டாம்-நிலை" பள்ளி மாணவனோ இந்த "முதல்வர்கள்" என்ற லிஸ்டில் பெரும்பாலும் வருவதே இல்லை. காரணம் ?

* ஆசிரியரின் அலட்சியபோக்கு
* சரியான வழிகாட்டுதல் இன்மை.
* கல்வி மீதான மாணவன் மற்றும் ஆசிரியரின் அணுகுமுறை
* மேற்கல்வி தொடர்பான மாணவனின் திட்டங்கள் தொலைநோக்கோடு இல்லாமல் இருப்பது
* இதற்கு பிறகு, பணமின்மை !!
* "படிக்காதவர்கள் பெரிய ஆள் ஆகலாம்", என்று சினிமா உருவாக்கி விட்ட மாயை

இதை மாற்ற என்னவெல்லாம் செய்யலாம், என்றால் மறுபடி "வியாபாரம்" என்ற சொல்லை உள்ளே கொண்டு வர வேண்டி இருக்கிறது. ஏனென்றால், தனியார் பள்ளிகள் நிச்சயமாக பணம் என்ற ஒன்றை அடித்தளமாக கொண்டுதான் நடத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. (சிலர் , விதிவிலக்காக இருக்கலாம். அவர்களுக்கு என் சல்யூட்! ) எந்த பள்ளி, ஆசிரியனுக்கு நிறைய பணம் கொடுகிறதோ அங்கே ஆசிரியரின் தரம் நன்றாக இருக்கிறது!

ஆனால், அதிக பண வசதி இல்லாத தனியார் பள்ளிகள் என்ன செய்கின்றன? வரவு இல்லாததால் ஆசிரியரும் கவனம் செலுத்துவதில்லை,சரியான உந்துதல் இல்லாததால் மாணவனும் படிப்பதில்லை!

அரசு பள்ளிகள், இதை விட கேவலம்! ஓர் அரசு பள்ளி ஆசிரியர், இப்போதெல்லாம் ஒரு மென்பொருள் பொறியாளனை விட அதிக சம்பளம் வாங்குகிறார். இதில் சைடு " ட்யூஷன்" வேறு! ஆனாலும் பள்ளியில் முன்னேற்றம் இல்லை, காரணம், அரசு வேலையின் அதீத சுதந்திரம்! "இன்ஸ்பெக்ஷன் வந்தாலும் சரி, நான் இப்படித்தான் இருப்பேன் என்கிற மனபோக்கு. பெரும்பாலான அரசு ஆசிரியர்கள் இப்போது, ஆசிரிய பணியை "சைடு" ஆக வைத்து கொண்டு "மெயின்" ஆக வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் பிள்ளைகள் எல்லாம் உயர்தர தனியார் பள்ளிகளில்தான் படிக்கின்றன.

எல்லாம் சரி! வசதி இல்லாதவர்கள் பிள்ளைகள், உயர்தர தனியார் பள்ளி மாணவன் பெரும் வாய்ப்புகளை பெற முடியாதா? முடியும்! இதற்கு சில பேருடைய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.

முதலில், அரசு பள்ளிகளின் கல்வி முறை மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்.
ஏட்டு கல்வியை தாண்டி, "அப்ளைட் சயின்சஸ்", எனப்படும் செயல் முறைதொடர்பான கல்வி முறை வர வேண்டும். அப்பொழுது , தான் கற்கும் கல்வியை நிதர்சன வாழ்க்கையில பயன்படுத்தும் முறையை மாணவன் அறிவான், கல்வி மீதான ஆர்வம் நிச்சயம் பிறக்கும். இதற்கு ஆசிரியரின் அறிவு நிறைய இருக்கவேண்டும். கற்கும் கல்வியை எப்படி எல்லாம் பயன் படுத்தலாம் என்று விளக்கும்அளவுக்கு "சரக்கு" இருக்க வேண்டும்.

அடுத்து, இருக்கக்கூடிய துறைகளில் எல்லாம், வேலை பார்ப்பவரை அழைத்துவந்து , அதாவது, ஒரு மென்பொருள் பொறியாளரயோ, ஒரு கட்டட கலை நிபுணரையோ, ஒரு மருத்துவரையோ , ஒரு கலைத்துறையை சேர்ந்த நிபுணரையோ அழைத்து வந்து அடிக்கடி ஒரு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யலாம். இதன் மூலம், தான் கற்கும் கல்வி எப்படி பயன் படுகிறது என்றும், தான் கற்பதால் அவன் எப்படி இருக்கலாம் என்று அவனுக்கான, எதிர்காலதிட்டங்களை வகுத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும்.

குறிப்பு : நிபுணர்களை அழைத்து வர காசு செலவு பண்ண வேண்டும் என்பதெல்லாம் இல்லை. பெரும்பாலோர் இதை சேவை என்று நிச்சயம் செய்வர்.

அடுத்து, பணம் இல்லாமல் படிப்பை நிறுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ள மாணவனை கண்டறிந்து, வங்கி கடன் முறைகளை பற்றி தெளிவு படுத்துவது ஆசிரியரின் கடமையாகும்.

இதெல்லாம் செய்யலாம், சிறிய தனியார் பள்ளிகள் என்ன செய்யும்? அவர்கள் "வியாபாரம்" என்ற வட்டத்தை விட்டு கொஞ்சம் வெளியே வந்தால் தான், மாணவர் முன்னேற்றம் காண முடியும். மாணவர்களிடம் "டொனேஷன்" என்று வாங்குவதை விடுத்து, ஒரு மிக பெரிய தொழில் அதிபரையோ, அரசியல் புள்ளியயோ பிடித்து, அவர்களிடம் பணம் கேட்டு தான் செய்யநினதவற்றைஎல்லாம் நிச்சயம் செய்யலாம். இவை எல்லா வற்றிலும் " நடைமுறை சிக்கல்கள் " எக்கச்சக்கம் உள்ளன. ஆனாலும், செய்யணும் என்று நினைத்தால் நிச்சயம் செய்யலாம்.

ஆகவே, முதலில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டியது, ஆசிரியர்களிடம். செய்வீர்களா ஆசிரிய பெரியவர்களே ????
"

Tuesday, May 12, 2009

அம்மா என்றழைக்காத !



போன ஞாயிற்றுகிழமை காரில் போய் கொண்டிருந்தேன். அன்னையர் தினம் என்று எனக்கு நினைவே இல்லை. FM இல் "அம்மா" பாடல்களாகபோட்டு கொண்டிருந்தார்கள். அம்மா பாட்டு என்றால் அதிமுக பிரசார பாடல்கள் அல்ல! "அம்மா" பாட்டு, அவ்ளோதான்!

அப்போது
, அன்னையர் தின வாழ்த்து சொல்ல சாலமன் பாப்பையா பேசினார்.
"எங்க அம்மா என்னைய எப்பவுமே திட்டிடே இருக்கும். எது நான் செஞ்சாலும், பாராட்டவே மாட்டாங்க! கெளவி ஏன் இப்படி செய்யுது
னு நான் நெனப்பேன். ஆனா, என்னைய பத்தி மத்த ஆளுகளுங்க கிட்ட பெருமையா பேசும். அவிக சொல்றது கேட்டு சந்தோச படுமாம். அந்த ஆளுக சொல்ல நான் கேட்டுருக்கேன். படிப்பறிவு இல்லாத பொம்பளைக்கு எப்படி இதெல்லாம் தோணுச்சுனு தெரியல. எங்க தன் பையன் பெரும பேசுனா தலைகனம் ஏறிடும்னுதான், இந்த மனுசி பேசலயோ என்னவோ,", அவர் வட்டார வழக்கில் பேச பேச , எனக்கு லேசாய் என் அம்மா ஞாபகம் வந்தது. ஆனால் என் அம்மா , நான் சிரித்தால் சிரிப்பாள், நான் அழுதால் அழுவாள். எனக்கு ஒரு பழக்கம் இருந்தது, ஸ்கூலில் படிக்கும் போது. நான் எந்த போட்டியில் பங்கு பெற்றாலும், என் அம்மா அங்கே இருக்க வேண்டும். அதுவும், ஆரஞ்சு புடவையில் தான் வர வேண்டும். இல்லாவிட்டால் நான் வேண்டும் என்றே தோற்று விடுவேன். இதற்காகவே, என் அம்மா வருவாள். என்னை பார்த்த படியே பெருமையாய் அமர்ந்திருப்பாள்.

எங்கோ
படித்த ஞாபகம், "அம்மாவை கடவுளாக பார்க்கலாமா?". பதில், இவ்வாறாக இருந்தது." அம்மா என்பவள் முதன்மையாக அன்பு செலுத்தவேண்டிய ஜீவனே அன்றி , கடவுள் அல்ல" என்று.

என் பார்வையில், இதற்கொரு சிறிய விளக்கம். ஆணின் உயிர்த்துளியை தாங்கி, நம் கண், காது, இதயம், பிறப்புறுப்பு , இன்ன பிற இத்யாதிகள் உருவாக துணைபுரிந்து, ஈன்றெடுத்து, படைப்பின் மொத்த சாராம்சமாய் விளங்குபவள் அம்மா! அவள் மீது அன்பு செலுத்துதல் என்று சுலபமாய் சொல்லி விட்டு போக முடியாது.
உன் வீட்டு நாய்க்கு கூடத்தான் நீ அன்பு செலுத்தலாம். ஆனால் ? அம்மா ?

உன்னை உருவாக்கியவளை, நீ உன் காலில் நிற்கும் வரை பாதுகாத்தவளை, அன்பு மட்டும் செலுத்தினால் போதாது. உன்னை கண்ணாய்பார்த்துகொண்டவளை, நீ கண்ணாடியாயாவது பார்த்துக்கொள்ள வேண்டாமா ?

முடிந்த
வரை அம்மா கூட இருங்கள்! வேலை, படிப்பு இன்னபிற காரணங்கள்இருந்தாலும், அடிக்கடியாவது அம்மோவோடு பேசுங்கள்! அவள் அன்பு நம் அனைவருக்கும் வாழ்த்துக்களாகத்தான் என்றும் இருக்கும் !



Saturday, May 9, 2009

புலனடக்கம்


என்ன அநியாயம்யா இது, ஓட்டு போட பணம் குடுத்துட்டு, நீ எனக்கு தான் ஓட்டு போடணும்னு மிரட்டறானுங்க!, இவனுங்கள எல்லாம் தூக்குல போடணும் சார் !

எப்படி புஷ் , சதாம் உசேன தூக்குல போட்டரோ, அந்த மாதிரி ஒபாமா வந்து இவனுங்கள புடிச்சி தூக்குல போடணும் !

இப்ப பாத்தீங்கன்னா , அந்த காலத்துல சிவாஜி கூட நின்னாரு, எம்ஜார எதுத்து ஒரு ஓட்டு வாங்க முடிஞ்சுதா? அதுக்கு எல்லாம் , நல்ல மனசு வேணும்ங்க! இப்ப பாருங்க இந்த விஜயகாந்த், இவன்லாம் என்ன பண்ண போறான் ? பத்து எடத்துல நின்னு தோத்துத்தான் போக போறோம் னு தெரிஞ்சும், ஒண்ணு, ரெண்டு ஓட்டுக்காக எதுக்கு நிக்கணும்ங்கறேன்?

பஸ்ஸு டிகெட்டு விலைய இவனுங்க பாட்டுக்கு ஏத்திடறானுங்க , காய் கறி வெலையெல்லாம் தாறுமாறா ஏறுது! என்ன நடக்குது சார் இங்க ? இந்த கருணாநிதி ஆட்சிலாம் ஆட்சியா ?

நிறுத்துக..........

இதெல்லாம் நான் கேட்டது சென்னை மாநகர பேருந்து ஒன்றில்.

அய்யா, அரசியல் பேசும் புண்ணியவான்களே! நீங்கள் உங்கள் நண்பர் ஜமாவிலோ, அல்லது உங்களுகென்று இருக்கும் விவாத கூட்டத்திலோ இதெல்லாம் பேசுங்கள்! மக்கள் கூடும் பொது இடங்களில் வேண்டாமே ப்ளீஸ்! உங்கள் கருத்தை ஒத்த சிந்தனை கொண்டவராக இருந்தால், பிரச்சனை இல்லை, மாற்று கருத்து கொண்டவர் உங்களுடன் பயணம் செய்தால் ??

அதனால், இடம் பொருள் ஏவல் அறிந்து அரசியல் பேசவும் . இது தேர்தல் சீசன் வேறு! வருகிறவன் போகிறவன் எல்லாம் அடிப்பான். கடைசியில் வடிவேல் மாதிரி 'அம்மே , அம்மே !' என்று முனகி கொண்டிருக்க வேண்டியதுதான்!


சந்தேக சதாசிவம் : எல்லாம் சரி! ஒபாமாவுக்கும் நம்மூர் உள்ளூர் தேர்தலுக்கும்
என்ன சம்பந்தம்? அவர எல்லாம் கூட்டிட்டு வந்து எதுக்கு இதுக்குள்ள இழுக்கணும்?

Friday, May 8, 2009

கைப்புள்ள !!!

நம்மாட்களில் பல பேர் இப்படித்தான்.. பத்து பேர் கூட இருந்தால் என்ன ஏது என்று கேட்காமல் கூட, "தட்னா தாராய்டுவ" என்று டயலாக் பேசுவார்கள். அவர்கள் உண்மையில் எப்படி என்றால் இப்படித்தான்!!!



இந்த வீர செயலின் விளைவு தெரியுமா ????


.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.................................................... இங்கே ..............................................................


என்னா அடி!! பில்டிங் ஸ்ட்ராங்!! பேஸ்மென்ட் வீக் !!

இப்படி உசுபேத்தி , உசுபேத்தியே உடம்ப ரணகளம் ஆக்கிடீங்களே டா !

இதை பார்த்து சிரித்து கொண்டாலும், விளையாட வேண்டிய வயது
வன்முறையில் இறங்குவதை பார்த்தால் நெஞ்சு பதறுகிறது!!

சிரித்து விட்டு சிந்தியுங்கள் !!




Friday, April 17, 2009

இரவினில் ஓர் உலகம்!

இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொருவருக்கும் சில கேள்விகள்....

1. உங்களின் மிக நீண்ட தொலை பேசி அழைப்பு எது ?
2. முகம் தெரியாத ஒரு நபருடன் குறைந்தது அரை மணி நேரம் பேசியதுண்டா?
3. தொலை பேசியில் பேசும்போது போலி சிரிப்பு சிரித்தது உண்டா?
4. உங்களை யாரென்றே தெரியாதவனிடம் திட்டு வாங்கி இருக்கிறீர்களா ?
5. அல்லது பாரட்டேனும் ??

எல்லோராலும் இந்த கேள்விகளுக்கு 'சரியான' முறையில் பதில் சொல்லி விடமுடியாது! ஆனால் சில பேரால் முடியும் !!

இன்று நேற்றல்ல, சுமார் ஒரு பதினைந்து வருடங்களாக இந்தியாவில் கோலோச்சிக்கொண்டிருக்கும் BPO எனப்படுகிற Business Process Outsourcing துறையில் வேலை செய்யும் ஒவ்வொருவரும் இந்த கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்கள் வைத்திருப்பார்கள்!

அதற்கு முன்னால் ... BPO என்றால் என்ன என்று தெரியாமல் இருப்பவர்களுக்கு!

ஒருவன் செய்ய கூடிய , செய்ய வேண்டிய வேலையை மற்றவருக்கு பணம் தந்து செய்ய சொல்வது தான் 'Outsourcing' என்பதின் சாராம்சம். இதில் வியாபாரம் என்னஇருக்கிறது என்று கேட்டால், ஒருவன் செய்ய கூடிய வேலையை, அதற்குசெலவாகும் பணத்தில் பாதியில் இன்னொருவன் முடித்து கொடுத்தால், வேலையை கொடுத்தவனுக்கு பணமும் மிச்சம், நேரமும் மிச்சம்!

இது முதல் முதலில் இந்தியாவில் தொடங்கப்பட்டது நடு 90'களில். 'Medical Transcription' (இதற்கான தமிழ் வார்த்தை தெரிந்தால் யாரேனும் கூறவும்) மற்றும்அதை சார்ந்த பிரிவுகளுக்காக அவுட் சோர்சிங் செய்ய ஆரம்பித்தார்கள். பின்னர்களின் இறுதியில் வாடிக்கையாளர் சேவை, தொழில்நுட்ப விளக்கங்கள், டேட்டா ப்ராசசிங் (தமிழ் வார்த்தை - ????) பிரிவுகளில் அவுட் சோர்சிங் தவிர்க்கமுடியாத ஒரு அங்கம் ஆகிவிட்டது!

இந்த துறை பெரும்பாலும் இந்தியாவில் பெரும் வளர்ச்சி அடைய காரணம் சில..

1. குறைந்த காசுக்கு வேலையை முடித்து தரும் இந்தியனின் இளிச்சவாய்த்தனம்.
2.இந்தியாவின் வேலை இல்லா திண்டாட்டம்
3.இந்தியனின் விசுவாசம்
4.அவன் செய்யும் வேலையின் மதிப்பு தெரியாமல் வேலை பார்க்கும் Innocence!!
5. இந்தியா வின் மனித வளம்!!

இன்னும் பல காரணங்கள் உண்டு! அனைத்தும் இவற்றின் ஏதோவொன்றின் கீழ்வந்துவிடும்!

சில பேர்களுக்கு இவர்களின் வேலை தான் என்ன என்ற சந்தேகம் வரலாம்! "நாங்கலாம் காலைல பத்து மணிக்கு ஆபிசுக்கு போவோம். லெட்ஜெர் கையெழுத்து போடுவோம். பதினொரு மணிக்கு டீ வட, நடுவுல அரட்ட, ஒருமணிக்கு மதிய சாப்பாடு, அப்புறம் சில கையெழுத்து.. சேர் உக்காந்துட்டு ஒருசின்ன தூக்கம்! அஞ்சு மணிக்கு வீடு!! என்ற அட்டவணைபடி வாழ்கின்றவர்கள், இந்த வேலைகளை புதியதாய் பார்க்கலாம்.

நான் இன்று எழுத நினைத்தது, Voice - based Support எனப்படுகிற தொலைபேசியில்பேசிகொண்டிருக்கும் வேலை பற்றி . உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கு சேவைஅளிக்க கூடிய நிறுவனங்கள் இருந்தாலும், பெரும்பாலான நிறுவனங்கள் பன்னாட்டு சேவை அளித்து வருகின்றன. அதாவது, வெளிநாட்டவர்கள்எங்கிருந்து கொண்டோ செய்யும் அழைப்பு வந்து சேர்வது இங்கு இந்தியாவில்ஒரு மூலையில், தனக்கென தரப்பட்டிருக்கும் கம்ப்யுட்டர் உடனும், தொலைபேசியுடனும் அமர்ந்திருக்கும் ஒரு இந்தியனிடம்.

உதராணமாக, தனது வங்கி கணக்கில் சிறிது பணம் காணாமல் போய் இருந்தால், அவன் அழைப்பது அவனது வங்கியை. அதாவது அவனது வங்கி என்று நினைத்துகொண்டு, இந்தியாவில் உள்ள ஒரு நிறுவனத்தை. அந்த நிறுவனத்தை சேர்ந்தஒரு ஊழியன், அந்த அழைப்புக்கு பதில் அளித்து, அந்த வாடிக்கையாளனின்நன்மதிப்பை பெற வேண்டும். அதனால் அந்த வங்கி மகிழ்ச்சி அடைகிறது, வங்கியால் நிறுவனத்துக்கு மகிழ்ச்சி, நிறுவனத்தினால் ஊழியனுக்கு மகிழ்ச்சி!!
இவ்வளவுதான்! இதற்கு பின்னால் உள்ளவற்றை நினைத்து பார்க்கும்போது தான்ஒரு பெரிய திரை நம் கண் முன்னால் விரிவதை காணலாம்.

பன்னாட்டு நிறுவங்களுக்கு சேவை அளிக்க கூடிய அனைத்து நிறுவனங்களும்இயங்குவது முழுவதுமாய் இரவு நேரங்களில். அங்கே பகல்! இங்கே இரவு.. பெரும்பாலும் அவர்களது நேரம் மாலை நேரங்களில் தொடங்கி முழு இரவு வரைசெல்லும். இரவு நேரம் என்பதால் அனைத்து நிறுவனங்களுமே தமதுஊழியர்களை அழைத்து வர வாகனங்கள் ஏற்பாடு செய்து விடுகின்றன.

எனக்கு தனிப்பட்ட ஒரு அனுபவம் இருப்பதால், என்னால் இதை சிறிது எழுத நினைக்கிறேன்.

எல்லாரும் உறங்க தொடங்கிவிடும் வேளைகளில் தன் இந்த உலகம் இயங்கதொடங்குகின்றது. இரவு எட்டு மணிக்கு குளித்து தெளிவாய் விபூதி வைத்து கொண்டுவரும் நடுத்தர வயதினரும், குளிக்க சோம்பேறித்தனம் கொண்டு வாசனைதிரவிய உதவியுடன் கிளம்பி வருபவரும், குடும்ப தேவையை ஈடு கட்ட அவசரசமையலை முடித்து கொண்டு , சிறு மகனுக்கு இரவு உணவூட்டி கிளம்புவோரும், தன் பணத்தேவைகளை தானே பார்த்துகொள்ளும் 'தன்னம்பிக்கை' பெண்களும், ஒரு சம்பளத்தில் வாழும் குடும்பத்தின் 'தூண்கள்' தன் குடும்பத்தின் கனவுகளை சுமந்து கொண்டு இரவு தூக்கத்தை துறக்க தயாராக நிற்பார்கள்.

இரவு எட்டு மணிக்கு அலுவலகம் என்றால், ஆறு மணிக்கெல்லாம் தயாரானால்தான் வாகன ஓட்டுனர் வந்து அழைத்து செல்வார். அந்த வாகனத்தில் ஏறவேண்டியவர்கள் என குறிப்பிடப்படவர்களை சுமந்து கொண்டு வாகனம், அலுவலகம் நோக்கி செல்லும். கண்களில் தூக்கம் கலந்த கனவுகளோடு, கழுத்தில் அடையாள அட்டையுடன் அடைக்கப்பட்ட வாகனங்களில்சிலர் செல்வதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

இந்த வேலைக்காக அவர்கள் அடமானம் வைப்பது உடல் நலம், மன நலம்என்கிற இரு மனித தேவைகளை!

இரவு நேரம் முழுதும் தொலைபேசியில் பேசிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். அழைப்பவனுக்கு சலாம் போடுவதில் இருந்து ஆரம்பித்து, அவன்சொல்லுவதற்கெல்லாம் ஆமாஞ்சாமி! போட்டு கொண்டே இருப்பது தான்வேலையே !

ஒரு சிறிய உரையாடலை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

"Thank you for calling ******, My name is Sam, May I know you first name and your last name please?

Oh, Thank you. Steve, How are you doing today??

"Fantastic, Thanks for asking"

I understand your concern Steve. I am very much here to help you. We will work together as a team and we will solve on this call Steve!!

.........................................................

இதில் உச்ச கட்ட கொடுமை என்னவென்றால், பேசுபவன் மனநிலை சரி இல்லைஎன்றால், நம் அம்மாவில் தொடங்கி அம்மாவின் கொள்ளு பாட்டி வரை திட்டுவாங்க வேண்டி இருக்கும். அப்போதும் சிரித்து கொண்டே, கேட்டுக்கொள்ளவேண்டும். ( வேண்டும் என்றால் 'MUTE' போட்டு கொண்டு அவனை திட்டலாம், ஆனால் அவனுக்கு கேட்காது ). உங்களுக்கெல்லாம் சொரணையே இல்லையாஎன்று கேட்கலாம்.

இதே கேள்வியை நான் ஒருவரிடம் கேட்டேன். அவர் சொன்னது
"பணம் பண்ணும் வித்தைடா!!

இதெல்லாம் எடுத்துக்கொள்வோரின் மனநிலையை பொறுத்தது. அவன் தனக்குசேவை அளிக்கும் (அதாவது, நமக்கு அவுட் சோர்சிங் அளிக்கும் ) நிறுவனத்தைதிட்டுகிறான் என்று நினைத்து கொள்ளவேண்டியது தான்! ஆனால் உன் தலைமேல இருக்கும் விளம்பர பலகை சொல்லும் " நீ தான் நிறுவனம் என்று ".

என்னால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை!

உட்கார்ந்தால் ஆடை கிழிந்து விடும் என்ற நிலையில் ஆடை அணிந்திருந்த பெண்ணை, கேட்டேன். நீ செய்யும் இந்த வேலை உனக்கு பிடித்திருக்கிறதா??
அவள் பதில் மிக நேராக இருந்தது, " நான் என் அப்பா அம்மாவை நம்பி இல்லை"
அவளுக்கு சம்பாத்தியம் தன்னம்பிக்கையை தந்திருந்தது. நல்ல விஷயம்! ஆனால் ஓர் சராசரி இந்திய பெண்ணிடம் இருந்து அவள் மாறுபட்டிருந்தாள், பேச்சு , உடை மற்றும் சிந்தனைகளில்..

அமெரிக்கா காரனோடு பேசுவது வேலை என்பதால் பேச்சு பயிற்சியோடு, அவர்களின் வாழ்கை முறை மற்றும் பழக்க வழக்கங்களையும் கற்றுதருவார்கள்(இது வெறும் வகுப்பறை பாடம் தான்!). அங்கே குடிப்பது என்பது மரியாதைக்குரிய ஒரு விஷயமாககருதபடுகிறது. இந்தியன் என்னதான் ஓர் உயரிய 'பாரில்' அமர்ந்து 'ஸ்காட்ச்' குடித்தாலும், இந்தியாவின் மொழியில் அவன் 'குடிகாரனே'. அவன் கலாச்சரதொடு ஒட்டி பழகுவதாலோ என்னவோ 'நான் குடிப்பதில்லை' என்றுசொன்னால் கேவலமாக பார்க்கிறார்கள். (குடிப்பது என்பது அந்தஸ்தை தரும் ஒரு செயல் என்று நான் நினைப்பதில்லை)

இது மாதிரி இரவு பறவைகளின் மனநிலைமை எப்படி இருக்கும், அவர்கள் செய்யவேண்டியது என்னென்ன என்பதை பற்றிய ஒரு கட்டுரை மிக சமீபத்தில் படித்தேன்.

'மன அழுத்தம்' மற்றும் 'பய உணர்வு ' இவர்களை அதிகம் பாதிப்பதாக அந்தகட்டுரை கூறுகிறது. மில் தொழிலாளிகள் மற்றும் உடலுழைப்பை நம்பிபிழைப்பும் கூட இரவு நேரம் வேலை செய்ய நேர்ந்தால், சிறிது நேரம்கண்ணயர்ந்து கொள்வார்கள். ஆனால் இங்கே நிலைமையே வேறு! வர கூடியஅழைப்பை எடுக்காமல் விட்டால், நிறுவனத்துக்கு டாலர் கணக்கில் நஷ்டம்ஏற்படும் என்று, கண்ணயர்ந்தாலும் சரி நீ அழைப்பை எடுத்துதான் ஆகவேண்டும்என்ற நிலைமை இருக்கும். எனவே வேலையினால் மன அழுத்தம்கொள்வோரும் உண்டு.

இன்னொன்று, இவர்கள் மேல் இருக்க கூடிய சமூகத்தின் பார்வை! ஒரு டிநிறுவனத்தில் வேலை செய்பவனையும், ஒரு கால் சென்டெரில் வேலைசெய்பவனையும் ஒரு சேர பார்த்தால், "நம்மவருக்கு" மரியாதையை இருக்காது. அது இந்த வேலை செய்பவர் எல்லாம் "கலாசார அழிப்பான்கள்" என்று சமுதாயம்இவர்கள் மேல் கொண்டிருக்கும் ஒரு பார்வை. இந்த துறையில் நமக்குஅயல்நாட்டு தொனியில் ஆங்கிலம் பேச தெரிந்தால் மட்டும் போதும்! நமக்கு
வேறென்ன தகுதிகள் இருக்கிறது என்றெல்லாம் கேட்க மாட்டார்கள். அதனால்என்னமோ பெரிய படிப்புலாம் படிச்ச, இப்போ இங்க தானே குப்ப கொட்ற", என்றுகீழ்த்தரமாய் ஒரு பார்வை நம் மேல் விழும். இங்கே நமது பட்டத்துகெல்லாம்மதிப்பில்லை என்பது சமூகம் இவர்களை இரண்டாம் நிலையில் வைத்துபார்ப்பதற்கான இன்னொரு காரணம். இதனால் மன அழுத்தம் கொள்வோரும்உண்டு.

வேலையை பற்றிய பாதுகாப்பு உணர்வு இந்த துறையில் மிக மிக குறைவு. ஒருவனை வேலையை விட்டு துரத்த காரணங்கள் கண்டுபிடிக்க மற்றதுறைகளை விட இங்கே வாய்ப்புகள் சுலபம் . எனவே ஒரு விதமான பய உணர்வுஇவர்களை ஆட்கொள்ளுகிறது.

'Biological Clock' எனப்படும் உடற் கூற்றை அளக்கும் கடிகாரம் இவர்களுக்குதாறுமாறாக செயல் படுவதாலும், 'Junk foods' எனப்படுகிற இந்திய உடல்நிலைக்கு ஒத்து வராத உணவுகளாலும், மேலும் அதனை உட்கொள்ளும் நேரம்
சரியாக இல்லாது இருப்பதாலும், பல்வேறு உடல் நல கோளாறுகளை இவர்கள்சந்திக்க நேரிடுகிறது.

இவ்வாறெல்லாம் வேலை செய்யும் இந்த துறையில், ஒரு மிகப்பெரிய பலம், ஒரு விதமான சாதகம் என்று கூட சொல்லலாம். எந்த துறை இழுத்துமூடப்பட்டாலும் இந்த துறை இருக்கும். ஏனென்றால், இனிமேல் புதியபொருட்கள் தயாரிக்க விட்டாலும், தயாரித்து வெளியிட்ட பொருட்களுக்குசேவை" செய்ய வேண்டும் அல்லவா? அதற்கு இங்கே தான் வந்தாக வேண்டும். மேலும், இங்கே விளையாடும் பணம். Time is Money என்பதுதான் இங்கேஎழுதப்பட்டு , எழுதப்படாத விதி!

நான் இந்த துறையை பற்றி எழுத நினைத்து எழுதிவிட்டேன். உடல் நலம், மனநலத்தில் மிக சிறந்தவர்கள் இங்கே தாராளமாய் வேலைக்கு செல்லலாம். என்னை மாதிரி சொகுசு விரும்பிகளுகெல்லாம் சரிப்பட்டு வராது!

Saturday, September 6, 2008

புதுக்கவிதைக்கு போறாத காலம்???

இன்று இந்த தலைப்பில் எழுத காரணம் சென்ற வாரம் நான் படித்த ஒரு கவிதை. அந்த வரிகள் எனக்கு சரியாக நினைவில்லை. ஆனால் அந்த கவிஞர் வருத்தபட்டிருந்தார். அதாவது இனிமேலும் வண்ணத்து பூச்சிகளையும் விதவைபெண்களையும் விட்டு விட்டு கவிதை எழுதுங்கள் என்று. இதை நினைத்துபார்க்கும்போது நிறைய கவிஞர்கள் (!!) மற்றும் கிறுக்குபவர்கள், ஒருவட்டத்திற்குள்ளேயே அடைந்து கிடைக்கிறார்கள் என்றே எண்ண தோன்றுகிறது. "நீ கல்லானால் நான் உளி, நீ காற்றனல் நான் இலை" என்றே இன்னும்எழுதிகொண்டிருந்தால் புதுக்கவிதை இன்று பெற்றுள்ள பரிமாணம் வளராது என்றும் எண்ண தோன்றுகிறது. நான் உவமைகளுக்கு, உருவகங்களுக்கு எதிரிஅல்ல. ஆனால் நல்ல கவிதை என்பது அழகான வரிகளில் மட்டும் இல்லை. ஆழமான கருத்துக்களில் உள்ளது. கவிதை என்பது காதலுக்காக மட்டும் அல்ல என்பது ஏனோ பலருக்கு புரிவதில்லை. கவிதை என்றால் நிலா இருக்கவேண்டும், அது பெண்ணை பற்றியதாகவே இருக்க வேண்டும் என்றே சிலர் நினைக்கின்றனர். இந்த வட்டத்தை விட்டு வெளியே வருபவர்கள், சமூகத்தைஅதன் வாழ்வியலை திறந்த கண்ணோடு பார்க்கிறவர்கள் சிறந்த கவிஞர்களாக உருவெடுக்கிறார்கள். அந்த வரிசையில் பலர் இன்று வந்துகொண்டிருந்தாலும், கவிதைகளை பற்றிய கண்ணோட்டம் அனைவருக்கும் மாறவேண்டும் என்பது என் விருப்பம். இந்த விருப்பம் நிறைவேறுமா என்று தெரியவில்லை. அதற்குமுன், இந்த தலைப்பை நீ எப்படி தேர்ந்தெடுக்கலாம் என்று என்னை கேள்விகேட்பது போல் அமைந்த ஒரு கவிதை. சென்ற வார ஆனந்த விகடனில் வெளியாகி இருக்கிறது. ஜெயராணி என்றொரு கவிஞர் 'பெண்கள் பூப்பைதுவதைபற்றி' எழுதியது. இதை படித்தபோது எனக்கே அடி வயிறு வலித்தது. அவர்களதுஅனுமதி இல்லாமல் நான் அதை இங்கே வெளிடுவதற்கு, நான் என் வழக்கறிஞரின் பின்னால் ஓட வேண்டி இருக்காது என்றே நினைக்கிறேன். அதைபாராட்டாமல் போக மனமில்லை. இதோ அந்த கவிதை...

முதல் குருதி...

ஆழ் உறக்கத்தில் பயமுணர்ந்து
உதிரம் கண்ட இரவில் தொடங்கியது
எல்லா துயரங்களுக்கான சாத்தியங்களும்

பயிற்றுவிக்கப்படாத.
முன்னறிவிப்பிலாத
முதல் மாதவிலக்கு..
காயமேதுமற்று உடலில் கண்ட
முதல் குருதி..
குழந்தைமையை நொறுக்கி
சிறு பூச்சிகளென பறக்கவிட்டது

உடல் முழுக்க பரவிக்கிடந்த
அயர்ச்சியும்
குடைந்த கால்களின் தனித்துயரும்
அடி வயிற்றின் பெரு அலறலும்
கன்றிப்போய் வலி தந்த மார்பும்
சேர்ந்த மனச்சோர்வும்
பிரவாகமெடுத்த கோபமும்
பீறிட்ட உதிரமும்
தனிச்சிறையில்
ஒளியும் காற்றும், துளி நீருமற்று
மூச்சுதிணறும்
கொடுநிலைக்கு தள்ளின...

புதுத்துணியும் அலங்காரமும்
விருந்தொம்பலேன ஏதும்
முறிக்கவில்லை
உடலில் ஏறிக்கிடந்த
வலிஎனும் நஞ்சை

வழிந்த கண்ணீரை துடைக்க
ஏதில்லாமல்
கைகளை வயிற்றுக்கு முட்டுக்கொடுத்து
குப்புறக்கிடக்கையில்
பாட்டி சொல்கிறாள்..

" இத கூட தாங்கலேனா
அப்புறம் என்ன பொம்பள ?"

இந்த மாதிரி கவிதைகளை படிக்கும்போது நம்மை அறியாமலே ஒரு உணர்வு நம்மை சூழ்ந்து கொள்கிறது. அந்த உணர்வுகள் நிச்சயம் நம் மனத்தை ஏதோ ஒரு விதத்தில் பாதித்திருக்கும். இதுதான் ஒரு சிறந்த கவிதைக்கு கிடைக்க கூடிய மிகச்சிறந்த பாராட்டு. அந்த வகையில் ஒரு வாசகனின் மனதைத்தொட்ட கவிஞர் ஜெயராணியின் கவிதைக்கு பாராட்டுக்கள். உங்களின் இந்த கவிதை பயணத்தில் சிகரங்களை தொட வாழ்த்துக்கள்!

நல்ல கவிதைகளின் ரசிகனான எனக்கு, ஒரு கவிதையை பற்றியே எனது முதல் வலைபக்கத்தில் எழுதுவதை நினைத்து எனக்கு மகிழ்ச்சியே !!